விளம்பரங்களில் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரி வழக்கு
1 min readLawsuit seeking ban on use of Karunanidhi’s photo in advertisements
1/9/2022
விளம்பரங்களில் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கருணாநிதி படம்
மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர்,முதல் அமைச்சர்கள் , சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்று மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வரலாற்றைத் திரிப்பதுடன், மற்ற முதல் அமைச்சர் பங்களிப்பை மறைமுகமாக குறைத்து மதிப்பிட வழிவகுத்து விடும் என்பதால், அரசு இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்த்திருந்தார்.
ஆவணங்கள்
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.