தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு
1 min read144 prohibitory order in Tuticorin district from this evening 9.5.2024
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) வீரசக்க தேவி ஆலய திருவிழா நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 12-ந்தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.