ரூ.70 லட்சம் மோசடி; அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்
1 min read70 lakh fraud; Suspension of Government School Teacher
28.10.2022
மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆசிரியர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 51). இவர் சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின்வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 40 பேர்களிடம் இருந்து தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வீதமும், 18 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதமும் ஆக மொத்தம் ரூ.94 லட்சத்து 50 ஆயிரத்தை சங்கரன் பெற்றார்.
ஆனால் பல மாதங்களாகியும் மேற்கண்ட நபர்களுக்கு சங்கரன், வேலை ஏதும் வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் பணம் கொடுத்தவர்கள், சங்கரனிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி பிரச்சினை செய்தனர். அதன் பின்னர் பல தவணைகளாக ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் சங்கரன் திருப்பிக்கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.70 லட்சத்தை உரியவர்களுக்கு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
கைது
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரனை கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் சங்கரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.++++++++++++++++++++++