உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 5 இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கின
1 min read
Flooding in Uttara Cauvery river- Land bridges submerged at 5 places
10.12.2022-
வேலூர் அணைக்கட்டு உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணைக்கட்டு பகுதியில் 5 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வாழைமரங்களும் சாய்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழை
மாண்டஸ் புயல் எதிரொலியாக வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கட்டு ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, ஊசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஜவ்வாதுமலை பகுதிகளிலும் கடந்த வியாழக்கிழமை மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. மேலரசம்பட்டு பகுதியில் உத்திரகாவிரி ஆறு உற்பத்தியாகிறது. தொடர் மழை காரணமாக இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 5-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் தரைப்பாலங்களை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கரை ஓரங்களில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வருவாய்த்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் போது 75 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசியதால் ஒடுகத்தூர் அடுத்து குப்பம்பட்டு பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த விவசாய நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாயந்தன. அணைக்கட்டு பகுதியில் மழை பாதிப்புகளை .ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி மற்றும் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கரடிகுடி ஊராட்சியில் வாரச்சந்தை நடக்கும் இடத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட அவர்கள் அதனை வெளியேற்ற உத்தரவிட்டனர்.
இதனையடுத்து.அருகில் உள்ள மலைகானாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை பார்வையிட்ட அவர்கள் கரை உடையாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க பணியாளர்களை அறிவுறுத்தினர். ஆய்வின்போது கரடிகுடி ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரன், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்