வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது- ஏ.டி.எம்.மில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை
1 min readBanks will not function for 5 days- measures to keep enough cash in ATMs
25.1.2023
வெள்ளிக்கிழமையை தவிர நாளை (26-ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது. வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
வங்கி
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30-ந்தேதி, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இதனால் 30-ந்தேதி (திங்கட்கிழமை), 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் வங்கிகள் இயங்காது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். எனவே நாளையும், வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வங்கிகள் இயங்கும்.
எனவே வெள்ளிக்கிழமையை தவிர நாளை (26-ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது. வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதே நேரத்தில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மும்பையில் துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கம் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து சமரச கூட்டம் வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.