தமிழகத்தில் நீட்டுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும்-அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டி
1 min readIn Tamil Nadu, extension will definitely be exempted – Minister Ma. Subramaniam interview
19.2.2023
ஈரோடு வ. உ. சி. பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் காலை அமைச்சர் மா. சுப்பிரமணியம் யோகா மற்றும் நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர் மைதானத்திற்கு நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி 2008-ல் உருவாக்கப்பட்டாலும் 10 ஆண்டுகளாக மாநகராட்சி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.480 கோடி மதிப்பில் திட்டங்களை கொண்டு வந்து முதல் – அமைச்சர் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்,
ஈரோடு கிழக்குக்கு முதல் – அமைச்சர் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். ஈரோடு கிழக்கு உதிக்கும்.ஈரோட்டில் மக்களை சந்திக்கும் போது மூன்று பிரதான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். ஜவுளி துறைக்கு நிரந்தரமான கண்காட்சி அமைக்கப்பட வேண்டும், சாலை வசதி மேம்படுத்த வேண்டும், சாயகழிவு அதனால் ஏற்படும் புற்றுநோய்க்கு தீர்வு காணப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்த பிறகு ஈரோடு நகரின் புற்றுநோய்க்கான நிரந்தர தீர்வு நிதிநிலை அறிக்கையில் கிடைக்கும்.
நீட் தொடர்பான மசோதா
குடியரசுத் தலைவர் மேல் நடவடிக்கைக்காக அனுப்பியதை உள்துறை அமைச்சகம் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் ஆயுஷ் அமைச்சகத்திற்கும் அனுப்பி உள்ளது. 2 அமைச்சகமும் சிறு விளக்கம் கேட்டு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதற்கும் விளக்கம் அனுப்பி இருக்கின்றோம். ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து கடிதம் மீண்டும் வந்துள்ளது. அதற்கு பதில் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
நீட் விலக்கு பெற தொடர்ச்சியாக பணி நடந்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி தலைமையிலான அரசு நீர்த்துப்போன சட்டம் 1956 இல் வந்த பழைய சட்டத்தை வைத்து உச்ச நீதிமன்றத்தில் நீட்டுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கை தொடர்ந்து நடத்தினால் பாதகமான தீர்ப்பு வரும் அந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் முதல் – அமைச்சர் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி புதிய வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார். இவ்வாறு பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது . முதல் – அமைச்சர் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.எனவே தமிழகத்திற்கு நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 2015 இல் அறிவிப்பு வெளியானது .2018-ல் அமைச்சரவை ஒப்புதல் தந்தது.2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
8 ஆண்டு காலம் இதற்கான முயற்சி நடைமுறையில் இருக்கிறது என்றாலும் அதற்கான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஆதாரமாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜெய்க்கா நிதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. பல்வேறு பணிகளுக்கு கடன் பெறுவதற்கான விளக்கங்களையும் வரைபடங்களையும் டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயிக்கா நிறுவனத்திடம் விளக்கி இருக்கின்றோம். தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே நிதி ஆதாரம் கிடைக்கும். ஒன்றிய அரசு நிதி ஆதாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இப்போதுதான் இதற்கான தனி அலுவலர் ஒன்றிய அரசை நியமித்திருக்கிறது .இதை முதலிலேயே செய்திருந்தால் அங்கிருந்து நிதி பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாம்.
ஒரு வேக நடவடிக்கையை எடுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம் . எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம். ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும். அவை இறுதி செய்யப்பட்டு 2024 இறுதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்திருக்கிறார்கள் 2024 இல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் 2028 இறுதியில் தான் பணிகள் முடியும்.. இது தான் உண்மை..
இவ்வாறு அவர் கூறினார்.