சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
1 min readAction on schools running special classes: Department of Education warns
4.5.2024
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகமானதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது.
அரசு பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ந் தேதியுடன் மூடப்பட்டன. வெயிலில் சிறுவர்கள் செல்லாமல் வீடுகளுக்குள் இருக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுப்பதால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.
ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தன.
100 சதவீதம் தேர்ச்சி, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வெப்ப அலை வீசி வரும் இந்த நேரத்தில் பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை. ஆனாலும் பள்ளி நிர்வாகத்தின் கட்டாயத்தின்படி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.