திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் 2 வடமாநில கொள்ளையர்கள் கைது
1 min read2 more North State robbers arrested in Thiruvannamalai ATM robbery
21.2.2023
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் வடமாநில கொள்ளை கும்பலால் 72 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலம் வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏ.டி.எம். கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஒரேநாளில் திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளையில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில் அரியானாவை சேர்ந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது
இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி அரியானா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அதில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் ஆசாத் (வயது 37) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் உள்பட 2 பேரையும் தனிப்படை போலீசார் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். கொள்ளையர்கள் 2 பேரையும் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சிய கொள்ளையர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் 2 பேர்
இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.