சாம்பல் புதன் நாளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
1 min readChristians pray on Ash Wednesday
22.2.2023
ஒவ்வொரு மாதமும் வாரத்திற்கு ஒரு நாள் புதன் கிழமை வருகிறது. ஆனால், சாம்பல் புதன் என்பது கிறிஸ்தவர்களுக்கு தனித்துவம் வாய்ந்தது. அதனை புனித நாளாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் இருந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. தொடர்ந்து, புனித ஞாயிறு எனப்படும் ஈஸ்டர் திருநாள் வரை 40 நாட்கள் அது நீடிக்கும். மதம் சார்ந்த விரதம் மற்றும் இறை வணக்கத்தில் ஈடுபட்டு கடவுளுடன் தங்களை தொடர்புப்படுத்தி கொள்ளும் ஆன்மீக பிரதிபலிப்பின் நாளாகவும் அது பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளே கிறிஸ்தவத்தின் அடிப்படையாக கொள்ளப்படுகிறது. இந்த நாளில் இருந்தே பாலைவனத்தில் கடுமையான சோதனைகளை கிறிஸ்து எதிர்கொண்டார். அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், சொர்க்கத்திற்கு செல்லுதல் வரை அவற்றை குறிப்பிடும் வகையில் இந்த தவக்காலம் தொடர்கிறது. அவர், தனது போதனைகளை தொடங்குவதற்கு 40 நாட்களுக்கு முன் பாலைவன பயணம் மேற்கொள்கிறார். அதில், பல சோதனைகளை எதிர்கொள்கிறார். அதனால், கிறிஸ்தவர்கள், இந்த தினத்தில் தங்களது ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கின்றனர். இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கிய உடலமைப்பு கொண்டவர்கள் இந்த நாளில் விரதம் இருக்கின்றனர். சாம்பல் புதன் தவிர்த்து, புனித வெள்ளியிலும் விரதம் கடைப்பிடிக்கப்படும். சாம்பல் புதன் தொடங்கி, 40 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் தவ வாழ்க்கையை கடைப்பிடித்து உணவு மற்றும் தங்களது மதம் சார்ந்த திருவிழாக்களை தவிர்த்து விரதத்தில் இருக்கின்றனர்.
எனினும், மிக இளம் வயதினர், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் இறைவணக்கம், விரதம் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் ஆகிய மூன்று விசயங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
இவற்றில் ரோமன் கத்தோலிக்கர்கள், லுத்தரர்கள், ஆங்கிலிக்கர்கள், பேப்டிஸ்டுகள் மற்றும் மெதடிஸ்டுகள் என அவர்கள் அனைவரும் சாம்பல் புதனை ஏற்று கொண்டு உள்ளனர். இந்த நாளை குறிக்கும் வகையில், அன்றைய தினம் தங்களது முன்நெற்றியில் அவர்கள் சாம்பலை பூசி கொள்கின்றனர். இறைவணக்க கூட்டத்தின்போது, வழிபாட்டாளரின் முன்நெற்றியில் பாதிரியார் ஒருவர் சிலுவை வடிவில் சாம்பலை பூசுகிறார். இந்த சாம்பலானது சில நாட்களுக்கு முன் குருத்தோலை ஞாயிறு தினத்தில் எரிக்கப்பட்ட பனைஓலையில் இருந்து பெறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் புலால் உண்ணாமலும், தலையில் பூ வைக்காமலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து செலவினங்களுக்கான பணத்தை உண்டியலில் சேமிப்பார்கள். அதற்கான உண்டியலை கிறிஸ்தவ ஆலயங்களில் வழங்குவார்கள்.
ஆரம்ப காலங்களில் மண் கலய உண்டியலும், தொடர்ந்து பிளாஸ்டிக் உண்டியல்களும் வழங்கப்பட்டு வந்தது. பனைஓலை உண்டியல் பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் களையும் வகையில் பனைஓலை உண்டியல்களை கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டது.