மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது-அண்ணாமலை பேச்சு
1 min readPaying people for their votes is like cancer – uncouth talk
26.2.2023
மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை
கோவை நவக்கரை பகுதியில் பாஜக சார்பில் விவசாயிகளின் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறியதாவது:-
தேர்தல் விதிமீறல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் 500க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சராசரியாக ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச், குக்கர், சில்வர் டம்ளர் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலம் கீழே இருந்து முன்னேறி வந்திருக்கிறது.
இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பொருளாதாரத்தை உ.பி. மாநிலம் முந்தி செல்லும். எத்தனை நாட்களுக்கு நாம் இதுபோன்ற அநாகரீக அரசியலை ஏற்றுக்கொள்ள போகிறோம். இந்தியாவில் எங்கேயும் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு போல் தேர்தலை நிறுத்தியதில்லை. திருமங்கலம் பார்முலா-வால் தமிழக மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதிரியான அரசியலை தான் முன்னெடுக்க வேண்டுமா? அப்படிதான் வெற்றிபெற வேண்டுமா? தேர்தல் முடிவு எப்படி வரும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் இதுபோன்ற அரசியலை மக்கள் ஆதரித்தால், புதியவர்கள் நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். இதனால் நாங்களும் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து நின்றிருக்கிறோம்.
ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்குக்கு பணம் தரப்படும் முறைக்கு மக்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . அதேபோல் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து பெறும் வெற்றி தேவையா. குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.