ஜம்புநதி பகுதியில் நபார்டு வங்கி மேலாளர், அதிகாரிகள் ஆய்வு
1 min readNABARD Bank Manager, officials inspection in Jambunadi area
1.3.2023
ராமநதி – ஜம்புநதி பகுதியில் நபார்டு வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ஆய்வு செய்தார். இணைப்பு கால்வாய் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
ஜம்பு நதி கால்வாய்
ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு 2020-ஆம் ஆண்டு நபார்டு வங்கி மூலம் ரூ.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கால்வாய் பணி முறையாக துவங்கப்படவில்லை. வனத்துறை அனுமதிக்காததால் திட்டம் நிறுத்தப்பட்டது.
தற்போது முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பின்னர் வன உயிரின நல வாரியக்குழு மாற்றியமைக்கப்பட்டு முதல்வர் தலைமையிலான அக்குழு கூடி ஒன்றிய அரசின் வனதுறை அனுமதி பெறும் வகையில் இத்திட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. அதில் சில தகவல்கள் விடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதை சரிசெய்து அனுப்ப தமிழ்நாடு அரசுக்கு திருப்பி விடப்பட்டு, தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்நிலையில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் இத்திட்டத்தின் இன்றைய நிலை குறித்து ஆய்வு செய்ய இவ்வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சந்தானம் தலைமையில் அதிகாரிகள் ஜம்புநதி பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே நடைபெற்ற பணிகளை பார்வையிட்டதுடன், தொடர்ந்து நடக்க வேண்டிய பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளோடு ஆலோசனை செய் தனர்.
வனத்துறை அனுமதியால் தாமப்படும் இத்திட்டத்தினை விரைவில் துவங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுப் பணியில் நபார்டு வங்கி சிறப்பு ஆலோசகர் செல்வின், மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிவேல்,உதவி செயற்பொறியாளர் முத்துமாணிக்கம்,உதவி பொறியாளர்கள் தங்கஜெய்லானி, தினேஷ், ராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் இராம.உதயசூரியன், ஆவுடையானூர் க.சௌந்தர்ராஜன், பொதுப்பணித்துறை உதவியாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.