புளியரை சோதனைசாவடியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்- முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அறிவிப்பு
1 min read
Protest if no action is taken against heavy vehicles at Puliyara check post- Ex-MLA Ravi Arunan announcement
7.3.2023
புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளம் உள்ளிட்ட துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைந்துள்ளன. கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்ல அனுமதி அளிப்பதாக ரவி அருணன் தெரிவித்துள்ளார்.
அம்பை மற்றும் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனிம வளம்
தென்காசி மாவட்டம் புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை ஆகிய சோதனை சாவடிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சோதனை சாவடிகளுக்கும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அங்கு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து தான் அனுப்ப வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. இருந்தும் கூட எல்லா சோதனை சாவடிகளிலும் கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக எடையுடன் அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்வதற்கும் அனுமதி அளிக்கின்றனர்.
இதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் சோதனை செய்யப்படாமலேயே வாகனங்களை அனுப்புவது குறித்தான வீடியோ ஆதாரங்கள் அனைத்து அதி காரிகளுக்கும் அனுப்பப் படும்.
அதன் பிறகும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய புகாரை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் புளியரை சோதனை சாவடிக்கு அப்பால் முன் அறிவிப்பின்றி ஒரு நாள் திடீர் மறியல் செய்வோம். ஒரு யூனிட் கனிம வளம் 4.5 டன் எடை இருக்கும். வாகனத்தில் ஏற்றப்பட்ட கனிம பொருட்களின் உயரம், அகலம், நீளம் அனைத்தையும் சரியாக அளந்தாலே அவை எவ்வளவு டன் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.
இதன் மூலம் 3 யூனிட்டுக்கு ‘பாஸ்’வாங்கி கொண்டு 13 யூனிட் வரை கனிமங்களை ஏற்றிச் செல்வதும் நிரூபனம் ஆகும்.
இவ்வாறு அடிக்கடி சோதனை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அரசினுடைய வருவாய் இழப்பை தடுக்கும் வகையில் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களின் நடவடிக்கை களை ஒடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டால் அரசின் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கத்திற்காக சிறை செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.