ராகுல் காந்தியை பலவீனப்படுத்த முயற்சி மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்
1 min readMallikarjuna Karke condemns attempt to weaken Rahul Gandhi
28.3.2023
ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது ராகுல்காந்தியை பலவீனப்படுத்தும் முயற்சி என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ராகுல்காந்திக்கு நோட்டீஸ்
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். எம்.பி. என்ற முறையில் ராகுல் காந்திக்கு டெல்லி துக்ளக் லேன் சாலையில் 12-ம் எண் முகவரி கொண்ட அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. அந்த வீட்டில்தான் ராகுல் காந்தி குடியிருந்து வருகிறார். எம்.பி.பதவி பறிக்கப்பட்டதால் அந்த வீட்டை அவர் காலி செய்ய வேண்டி உள்ளது. ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பலவீனப்படுத்த முயற்சி
ராகுல் காந்தியை பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் அவர்கள் செய்வார்கள். அவர் (ராகுல் காந்தி) அரசு பங்களாவை காலி செய்தால் தனது தாயுடன் வசிப்பார் அல்லது என்னிடம் வரலாம். அவருக்காக நான் காலி செய்வேன். ராகுல் காந்தியை பயமுறுத்தும், அச்சுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் மத்திய அரசின் அணுகு முறையை கண்டிக்கிறேன்.
இது சரியான வழியில்லை. சில நேரங்களில் நாங்கள் 3 முதல் 4 மாதங்கள் வரை பங்களா இல்லாமல் இருக்கிறோம். 6 மாதங்களுக்கு பிறகு எனது பங்களாவை பெற்றேன். பிறரை இழிவுப்படுத்துவதற்காகவே இப்படி செய்கிறார்கள். இத்தகைய அணுகு முறைக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.