ஆந்திராவில தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2024/05/ஆந்திர-வைரம்.jpg)
Diamonds are mined in Andhra Pradesh
26.5.20241 –
ஆந்திரத்தில், கர்னூல் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் வயல் பகுதிகளில் வைரக்கற்கள் கிடைப்பதாகவும், அதனை எடுக்க மக்கள் படையெடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் மழைக்காலம் என்பது விவசாயிகளுக்கு மட்டும் நம்பிக்கை தருவதாக அமைவதில்லை. அங்கு இருக்கும் வைரக்கற்கள் வேட்டையாடுபவர்களுக்கும் சிறப்பான காலமாக அமைந்து விடுகிறது.
அங்குள்ள துக்கலி மற்றும் மட்டிகேரா பகுதி கிராமங்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் ரூ.70 லட்சம் மதிப்பிலான வைரக்கற்களை விவசாயத் தொழிலாளர்களால் தோண்டியெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மதனந்தபுரம் கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வைரக்கல் அந்தப் பகுதி உள்ளூர் விவசாயியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை பேராவளி கிராமத்தைச் சேர்ந்த வியாபாரியிடம் விற்றுள்ளார்.
காவல்துறையினரும் இவ்வாறு நடப்பது குறித்து விசாரித்தபோது மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும், சுற்று வட்டார கிராமங்களில் வைரங்களை எடுக்க ஆண்டுதோறும் மே முதல் மழைக்காலம் முடியும் வரை மக்கள் வந்து கொண்டிருப்பதாகவும், வைரகற்கள் கிடைப்பது குறித்து தங்களுக்கு அந்தத் தகவலும் கிடைப்பதில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜோன்னகிரி, துக்கலி, மத்திகேரா, பகிதிரை மற்றும் பேராவளி மண்டல கிராமங்களில் வைரங்களை மக்கள் தோண்டி எடுப்பது வழக்கமாக நடப்பதாகும். இதற்காக வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். அவர்கள் வயல்களில் வைரங்களைத் தேடி எடுப்பதற்காக கும்பல் கும்பலாக வருவதுடன், தேடும்போது சமைத்து சாப்பிட உணவுப் பொருள்களுடன் வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் மண் அரிக்கப்பட்டு சில நேரங்களில் வைரக்கற்கள் வெளிப்படும். துக்கலி மற்றும் மத்திகேரா பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 5 கோடி மதிப்பிலான வைரக்கற்கள் கிடைப்பதாக அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் உலவுகின்றன. இதனால் சிலர் ஒரே இரவில் பணக்காரர்களாக ஆனாலும் இடைத்தரகர்களே பெரும் லாபமடைவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் வைரக்கற்களை அதன் மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்கி அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது.