தேர்வு அறைக்குள் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
1 min readTeacher arrested for sexually harassing 10th class student inside examination room
10.4.2023
தக்கலை அருகே தேர்வறைக்குள் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அதன்படி குமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 116 மையங்களில் நடந்து வருகிறது. தக்கலை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6-ந் தேதி மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வு எழுதினர்.
அந்த மையத்துக்கு தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்வறைக்கு சென்ற அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஒரு மாணவியை தொட்டு பேசியபடி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறினார். உடனே பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் முறையிட்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து கல்வித்துறைக்கும், குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
கைது
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆசிரியர் வேலவனை அதிரடியாக கைது செய்தனர். தேர்வு அறையில் 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக ஆசிரியர் கைதான சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.