லண்டனில் சாவர்க்கர் குறித்து பேச்சு: ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
1 min read
Talk on Savarkar in London: Another defamation case against Rahul Gandhi
13/4/2023
லண்டனில் சாவர்க்கர் குறித்து பேசியது தொடர்பாக ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டு உ்ளளது.
ராகுல்காந்தி
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 23-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அப்பீல் மனுவுடன் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இதே போன்று அவதூறு வழக்கு ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா கோர்ட்டிலும் தொடரப்பட்டது. பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், மாநில பா.ஜனதா தலைவருமான சுஷில்குமார் மோடி இந்த வழக்கை தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி வருகிற 25-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பாட்னா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒரு வழக்கு
இந்த நிலையில் ராகுல்காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக மகாராஷ்டிர மாநிலம் புனே கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் பேசியபோது சாவர்க்கர் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை அவரது பேரன் சாத்யகி சாவர்க்கர் தொடர்ந்துள்ளார். இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் அவரது வக்கீல்கள் வழக்கு தொடுத்து உள்ளனர்.