தென்காசி அருகே பாட்டாக்குறிச்சி ஊராட்சி தலைவர்-துணைத் தலைவரின் அதிகாரம் பறிப்பு
1 min read
Patakurichi panchayat president-deputy president deprived of power near Tenkasi
23.4.2023
தென்காசி அருகே பாட்டாக்குறிச்சி ஊராட்சி தலைவர்-துணைத்தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் எடுத்துள்ளார்.
பாட்டாக்குறிச்சி
தென்காசி மாவட்டம், தென்காசி யூனியனுக்கு உட்பட்ட பாட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக அன்னலெட்சுமி, துணைத்தலைவராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் செயல்படாமல் இருந்ததால் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்து வந்தனர்.
அந்த புகார் மனுவில், ஊராட்சியில் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை என்றும், துணைத்தலைவர் ஊராட்சியில் வேலை பார்க்கும் அனைவரையும் வேலை செய்யவிடாமல் தடுப்பதுடன், வேலை செய்பவர்களை மிரட்டி வருகிறார் எனவும் புகார் கூறியிருந்தனர்.
இந்த புகார்கள் தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி இயக்குனர் சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பாட்டாக்குறிச்சி ஊராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டார். அதில் பாட்டாக்குறிச்சி ஊராட்சியின் தலைவர் அன்னலெட்சுமி, துணைத்தலைவர் முருகேசன் மற்றும் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் இருப்பதும், தலைவர் மற்றும் துணைத் தலைவர் தங்களது குடும்ப பிரச்சினை காரணமாக ஊராட்சியினை செயல்படாமல் வைத்துள்ளனர் என்பதும் உறுதியானது.
கலெக்டர் உத்தரவு
இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தும் அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தினால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203-ன்படி பாட்டாக்குறிச்சி தலைவர் அன்னலெட்சுமி மற்றும் துணைத்தலைவர் முருகேசன் ஆகியோரது காசோலைகள் மற்றும் பி.எப்.எம்.எஸ்.களில் கையொப்பமிடும் அதிகாரத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு வழங்குவதாக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.