சேதம் அடைந்த கோவில்களை புனரமைக்க பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்
1 min readPon Manikavel urges restoration of damaged temples
26.6.2023
சேதம் அடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டுமு் என்ற பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
பொன்.மாணிக்க வேல்
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற பொன்.மாணிக்கவேல் இன்று நெல்லைக்கு வருகை தந்தார். அவர் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளது. இதில் நலிவடைந்த கோவில்கள் பல உள்ளது. கோவில்கள் பணம் வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இது தவறான முன்னுதாரணம். இது போன்று பிரிப்பது வியாபார நோக்கமாக மாறிவிடும்.
தூத்துக்குடி மாவட்டம் நானல்காடு பகுதியில் உள்ள திருகண்டீஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த கோவில் ஆபத்தான நிலை இருப்பதால் கோவில் மூடப்பட்டுள்ளது. அது பாண்டியர் காலத்து கோவில். உடனடியாக சிதலமடைந்த கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
கோவில் பூஜைக்கு வயதான அர்ச்சகர்களை நியமித்துள்ளனர். அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். கோவில்களை வரலாற்று பொக்கிஷங்களாக பார்க்க வேண்டும். கோவில்கள் தமிழ் பேரரசர்களால் கட்டப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் உடனடியாக அதனை காப்பாற்ற வேண்டும்.
ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவிலில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது. உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. பந்தநல்லூர் கோவில் திருமேனி பாதுகாப்பு மையம் மட்டும் கட்டபட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிக்கப்பட்ட அளவீடுகளில் கட்டப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக சொல்லி வருகின்றனர். தமிழகத்தை ஆளுகின்றவர்களும், முதலமைச்சராக வர ஆசைப்படுபவர்களும் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.