மணிப்பூர் பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் பேச மல்லிகார்ஜுன கார்க்கே கோரிக்கை
1 min read
Mallikarjuna demands Prime Minister to speak about Manipur in Parliament
24.7.2023
மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்க்கே கூறினார்.
பாராளுமன்றக் கூட்டம்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை (20-ந்தேதி) தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அலுவல் பணி ஏதும் நடைபெறாமல் இன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் இன்று காலை பாராளுமன்றம் தொடங்கியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதன்காரணமாக மதியம் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கபப்ட்டது.
இதற்கிடையே இன்று காலை பாராளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அமளியில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ”நாங்கள் விவாதத்திற்கு தயார், ஆனால் 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசிய நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கும் பாராளுமன்றத்திற்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும்” என்றார்.