உதயநிதிக்கு அண்ணாமலை சவால்/ குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெறமுடியுமா?
1 min read
Annamalai challenge for Udhayanidhi- Can you pass Group 4 exam?
22.8.2023
நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இதுவரை நீட் தேர்வுக்கு 21 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் நாம் தற்கொலை என பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த 21 மரணங்களும் தற்கொலை அல்ல. இந்த கொலையை செய்தது மத்திய பா.ஜ.க. அரசு. அதற்கு துணை நின்றது அ.தி.மு.க. தான். “நீட் தேர்வு குறித்து நான் ஐந்து ஆண்டுகளாக பேசி வருகிறேன். இனியும் பேசுவேன். இங்கு போராட்டம் நடந்து வரும் போது, கவர்னர் ஆர்.என். ரவி நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து கூட்டம் நடத்தி வருகிறார். அவர் ஒரு தபால்காரர். நீங்கள் ஆர்.என். ரவி இல்லை, ஆர்.எஸ்.எஸ். ரவி. கவர்னருக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு எடுங்கள்,” என்று பேசியிருந்தார்.
அண்ணாமலை பதில்
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதில் அளித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ. பதவியை துறந்துவிட்டு யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். உதயநிதி ஸ்டாலின் சாதாரண டி.என்.பி.எஸ்.சி. அல்லது சிவில் சர்வீஸ் தேர்வு, இல்லை எனில் குரூப் 4 தேர்விலாவது தேர்ச்சி பெற்றுவிட்டு பேசட்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.