டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பு
1 min read
புதிய கவர்னர் ஆர்.என்.ரவி
TNPSC Shailendra Babu as Chairman.. Tamil Nadu Government’s recommendation rejected by the Governor
23.10.2023
டிஎன்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தார்.‘
சைலேந்திரபாபு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பின், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, தேர்வு முடிவுகள் உள்ளிட்டவைகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும், உறுப்பினர்களாக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து, அதற்கான பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைத்தது.
இதற்கு பதில் அளித்த ஆளுநர் மாளிகை, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா? தலைவர் தேர்வு எந்த முறையில் நடைபெற்றது, உறுப்பினர்கள் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது போன்ற விளக்கங்கள் கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டதை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.