திருப்பத்தூர் மாவட்டம் மின்வேலியில் சிக்கி இருவர் பலி
1 min read
Two people got caught in the electric fence and died
4.12.2023
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இறந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் 1-ஆவது தார்வழி பகுதியில் மலையடிவாரத்தில் விவசாயி ராமமூர்த்தி நிலம் உள்ளது.
அந்த விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த மணி மகன் வெங்கடேசன் (22),சீதாராமன் மகன் ஜெயக்குமார் (52)ஆகிய இருவரும் ராமமூர்த்தி விவசாய நிலத்தின் வழியாக சென்றுள்ளனர்.
அப்போது, காட்டு விலங்குகளுக்காக சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
அந்தவழியாக சென்றவர்கள் அதை பார்த்துவிட்டு ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கும் மற்றும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல ஆம்பூர் பகுதியில் வனத்துறை எல்லையோர கிராமங்களிலும் சட்டவிரோதமாக சில பகுதிகளில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வனத்துறையினர்,காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.