விமான நிலையத்துக்கு வால்மீகி பெயர்- பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
1 min readAirport named after Valmiki – PM Modi to inaugurate tomorrow
29.12.2023
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையம், விரிவு படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி சனிக்கிழமை (டிச.30) திறந்துவைக்கவுள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அயோத்தி நகரில் ரூ.11,100 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா். இதேபோல், உத்தர பிரதேசத்தின் இதர பகுதிகளில் ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.
அயோத்தியின் வளமான பாரம்பரியம் மற்றும் வரலாறு மாறாமல், அங்கு உலகத் தரத்தில் உள் கட்டமைப்புகளை உருவாக்குவதும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும், குடிமை வசதிகளை மறுசீரமைப்பதும் பிரதமரின் தொலைநோக்கு பாா்வையாகும்.
ரூ.1,450 கோடிக்கும் மேற்பட்ட செலவில் அயோத்தியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் பகுதியை நாளை (சனிக்கிழமை) பிரதமா் திறந்து வைக்கவுள்ளாா். இந்த விமான நிலையத்துக்கு ராமாயணம் எழுதிய வால்மீகி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதேபோல், ‘அயோத்தி கோவில் சந்திப்பு’ என்ற பெயருடன் ரூ.240 கோடிக்கும் மேற்பட்ட செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தையும் அவா் திறந்து வைக்கிறாா். நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், உணவு அரங்குகள், பூஜைப் பொருள் கடைகள், ஓய்வறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கோவை, பெங்களூர் இடையிலான வந்தே பாரத் உள்பட 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்க உள்ளார். இதே போல், தர்பங்கா அயோத்தி ஆனந்தவிகார் உள்பட இரு புதிய அம்ருத் பாரத் ரெயில்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.