மத்தளம்பாறையில் மிராக்கிள் நல மையம் சிகிச்சை விளக்க கூட்டம்
1 min readMiracle Health Center Treatment Briefing Meeting
30.1.2024
தென்காசி அருகே மத்தளம்பாறையில் உள்ள சோகோ கார்ப்பரேஷன் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு இயங்கி வரும் மிராக்கிள் ஒருங்கிணைந்த நல மையத்தில் அங்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் பற்றிய விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியில் சோஹோ நிறுவன அதிபர் ஶ்ரீதர் வேம்பு, டாக்டர் அருள் ஆகியோர் இணைந்து தென்காசியில் அமைத்துள்ள நல மையத்தில் தான் சிகிச்சை பெற்ற அனுபவம் பற்றியும், ஸ்ரீதர் வேம்பு கிராம மக்கள் வேலைவாய்ப்பு, வளர்ச்சி, கல்வி மற்றும் உடல்நலத்துக்காகத் தன்னலமற்ற தொண்டாற்றி வருவதைச் சிலாகித்தும்
தென்காசி மூத்தோர் மன்றத்தின் தலைவர் அழகராஜா,பேசி, அனைவரையும் வரவேற்றார்.
சோஹோ நிறுவன தலைமை செயல் அதிகாரி பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு கோவை மிராக்கிள் நல மையத்தில் தான் பெற்ற சிகிச்சைகளால் தனது உடல் நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும், தென்காசிப் பகுதி மக்கள் வசதிக்காக டாக்டர் அருள் உதவியுடன் இத்தகைய நல மையம் இங்கு தொடங்கியது பற்றியும், சிகிச்சைகள் பற்றித் தான் தேடி அறிந்து கொண்ட செய்திகளையும் பகிர்ந்து,, மேலைநாடுகளில் மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின், நோய்களுக்கான தீர்வு நிரூபிக்கப் பட்ட சிகிச்சைகளையே நல மையத்தில் வழங்குவதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் அருள் நல மையத்தில் அளிக்கும் சிகிச்சைகள் பற்றியும், சரியான உணவுப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வது, ஜீரண மண்டலம், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, புற்று நோய், மூட்டுவலி போன்ற நோய்களுக்கான சிகிச்சை ஆகியன பற்றி விவரித்தார். அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
மேற்கு வங்கம் கல்கத்தாவில் மருத்துவத் துறையில் உயர்பதவிகளை வகித்துத் தற்போது ஸ்ரீதர் வேம்புவுடன் இணைந்து கிராம மக்களுக்குத் தொண்டாற்ற புலம்பெயர்ந்து தென்காசிப் பகுதிக்கு வந்துள்ள குருதியியல் துறை மருத்துவ நிபுணர் ப்ராண்டர் சக்கரபர்த்தி புற்றுநோய்ப் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்று உரையாற்றினார்.
யோகக் கலை மாஸ்டர் சிவா நமது பண்டைக் கால மருத்துவ அறிவு பற்றி பல்வேறு சித்தர்களை மேற்கோள் காட்டி மிராக்கிள் நல மையத்தில் வழங்கிவரும் நவீன சிகிச்சைகளுக்கும், நமது முன்னோர் சொல்லிச் சென்ற மருத்துவ உண்மைகளுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கிப் பேசினார். தென்காசி மூத்தோர் மன்றச் செயலாளர் இராமலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்
தென்காசி மூத்தோர் மன்றத்தின் தலைவர் அழகராஜா பொருளாளர் கே.கணேசமூர்த்தி, செயலர் இராமலிங்கம் ஆகியோர் மிராக்கிள் நல மையத்துடன் இணைந்து கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்..
இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் முத்துசாமி, தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ், முன்னாள் ரோட்டரி ஆளுநர் கே இராஜகோபாலன், பிரீமியர் இராமன், மூத்தோர் மன்ற உறுப்பினர்கள், ரோட்டரி உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.