சுரண்டையில் கல்லூரி சந்தை- ஆட்சியர் தொடங்கி வைத்தார்
1 min read
Surandai College Market- Collector started
15.2.2024
தென்காசி மாவட்டத்தில் 4 வது கல்லூரி சந்தை நிகழ்ச்சி சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கியது. கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை தாங்கி திறந்து வைத்தார்;. மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் இரா. மதி இந்திரா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது:-
மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நகரின் முக்கிய இடங்களில் வணிக வளாகங்கள், கியாஸ்க் அங்காடிகள், நடமாடும் அங்காடிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அவர்களது உற்பத்திப் ;பொருட்களுக்கு மதி என வணிக குறியீடு ஏற்படுத்தி பிரபலப்படுத்தி வருகிறது.
பேக்கிங், உணவு தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை தர சான்றுகள் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு அரசு பல்வேறு பயிற்சிகள் உதவிகள் செய்து வருகிறது. அந்த வகையில் இளைய தலைமுறையினரிடம் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களிடம் சென்றடையவும் ஏதுவாக மாவட்டத்தின் முக்கிய கல்லூரிகளில் கல்லூரி சந்தை என்ற பெயரில் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிதியாண்டில் தென்காசி மாவட்டத்தில் இதுவரை 3 கல்லூரிகளில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 105 மகளிர் சுய உதவிக்குழுக்களின் ரூ.5.94 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகி உள்ளன,
இந்த கல்லூரி சந்தையில் 49 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு உள்ளனர். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்று உள்ளனர். ஆயத்த ஆடைகள், கைத்தறி சேலைகள், மண்பாண்டங்கள், உணவுப் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள் என பல்வேறு பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகள் அதிக அளவில் பொருட்களை கொள்முதல் செய்வதுடன் அவர்களது பொருட்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.