தென்காசி அருகே மது போதையில் ஒருவர் கொலை- நண்பர்கள் 2 பேர் கைது
1 min readA man was killed under the influence of alcohol near Tenkasi – 2 friends were arrested
14.4.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற அவரது நண்பர்கள் இரண்டு பேர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வருபவர் உதயன் (வயது 50) இவர் கேரள மாநிலம் பத்தனாபுரம் பகுதியைச் சார்ந்தவர்.
நேற்று காலையில் இந்தத் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தோட்ட காவலாளி உதயன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி உடனடியாக புளியரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் நேற்று முன்தினம் இரவு உதயனுடன் சேர்ந்து இரண்டு பேர் இந்தத் தோட்டத்தில் நீண்ட நேரமாக இருந்தது தெரிய வந்தது.
அவர்கள் யார் அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் உதயனின் நண்பர்களான குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியைச் சார்ந்த சஞ்சய் (வயது 23) மாரியப்பன் (வயது40) ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சஞ்சய் மாரியப்பன் உதயன் ஆகிய மூவரும் முதல் நாள் இரவு நள்ளிரவு வரை ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வல்லம் சஞ்சய் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து உதயனை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிவித்தனர்.
உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். அப்போது நீதிபதி இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதன்படி போலீசார் இருவரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.