பரமக்குடி ஆர்.டி.ஒ. லஞ்ச வழக்கில் கைது – உடந்தையாக இருந்த டிரைவரும் சிக்கினார்
1 min read
Paramakudi RDO arrested in bribery case; driver who abetted the crime also nabbed.
9.8.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பல கண்மாய்களில் சவடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவணப் பெருமாள், குறிப்பிட்ட கண்மாயில் சவடுமண் அள்ள அனுமதி கேட்ட ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை அந்த நபர் நேற்று 8 ம்தேதி பரமக்குடி ஓட்டப்பாலம் சமீபம் உள்ள வருவாய் கோட்டாட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.அங்கு சென்ற அந்த நபரிடமிருந்து வருவாய் கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் ரூ.50 ஆயிரம் பெற்றார்.அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் சரவணப் பெருமாளை (வயது 52) கையும் களவுமாக கைது செய்தனர். வருவாய் கோட்டாட்சியர் லஞ்சம் பெற உடந்தையாக இருந்த அவரது கார் டிரைவர் சுந்தரும் (வயது 41) கைது செய்யப் பட்டார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் முகாம் அலுவலகத்தை சோதனையிட்ட போது அங்கு கணக்கில் வராத ரூ.5.52 லட்சம், முக்கிய பல ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும் மதுரையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் வீட்டிலும்,அவரது கார் ஓட்டுநர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் இரவு வரை சோதனை நடத்தினர்.தொடர்ந்து இருவரிடம் காவலர்கள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் வருவாய்த் துறையினரிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச் சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.