2047 ல் பாரதம் வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் – ஜே.பி.நட்டா பேச்சு.
1 min readIndia should become a developed country by 2047 – JP Natta speech.
16.4.2024
பரமக்குடியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர், முன்னாள் முதல் அமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்திற்கு பலாப் பழம் சின்னத்திற்கு பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகன பேரணியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் தேசிய ஜனநாயக. கூட்டணி வேட்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பலாப் பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடியில் வாகன பேரணி சென்றார். முன்னதாக, பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பரமக்குடி சரசுவதி நகர் தனியார் ஆங்கிலப் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம், பா.ஜ.க.தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தருமர் ஆகியோர் வரவேற்றார்.
பின்பு பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பரமக்குடி கிழக்குப் பகுதி கிருஷ்ணா பகுதியில் இருந்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பலாப் பழம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வாகன பேரணி சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம்,பொன்விழா அலங்கார வளைவு வழியாக காந்தி சிலை பகுதியை வந்தடைந்தார்.
முன்னதாக பரமக்குடி கிழக்கு பகுதியான கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து காந்தி சிலை வரை சாலையின் இருபுறமும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடிநின்ற பொதுமக்கள் வாகன பேரணியாக வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் பூக்களை தூவி வரவேற்றனர்.
பின்பு காந்தி சிலை வந்தடைந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில் கூறியதாவது :-
தங்கள் அனைவரையும் பார்க்கும் போது ஒ.பி.எஸை டெல்லிக்கு அனுப்பி வைக்க தயாராகி விட்டீர்கள் என நினைக்கிறேன்.மிகவும் சிறந்த திறமை வாய்ந்த தகுதி வாய்ந்த அவருக்கு பிரச்சாரம் செய்ய வந்திருப்பதற்கு மிகவும் சந்தோஷப் படுகிறேன்.தமிழ்நாட்டில் மக்களுக்காக குரல் கொடுப்பவர் ஒ.பி.எஸ்.அவரது ஆற்றல் மிகுந்த பணிக்காக பலாப் பழம் சின்னத்திற்கு வாக்களிப்பீர்களா என மூன்று முறை கேட்டார்.அதற்கு திரளாக கூடியிருந்த மக்கள் வாக்களிப்போம் என்றனர்.
தொடர்ந்து நட்டா பேசுகையில், தற்போது நடக்கும் இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல.
2047 ல் பாரதம் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும்.அதற்காக 400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகளுடன் வெற்றி பெறும்.மோடியின் ஆட்சியில் நாடு வளர்ந்து இருக்கிறது.பெண்கள் அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் பெற்று கொண்டு இருக்கிறார்கள்.அதுமட்டுமில்லாமல் ஏழைகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.இன்றைக்கு மருத்துவ வசதி உள்பட பல்வேறு வசதிகள் பெற்று வருகின்றனர்.
இந்த அரசு ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கி வருகிறார்கள். மேலும் 5 வருடம் கொடுக்க இருக்கிறார்கள்.இதன் மூலம் 25 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்துள்ளனர் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை படுகிறேன்.
எனவே மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஒ.பி.எஸ்க்கு பலாப் பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் வாக்குகள் கேட்டு பேசினார்.
பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், பா.ஜ.க.மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தருமர்,நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகேந்திரன், ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் ஜெயகுரு, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள்,கட்சியினர்,கூட்டணி கட்சியினர், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகன பேரணியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பரமக்குடி நகருக்குள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பேருந்துகள் வந்து செல்ல தடை செய்யப் பட்டதுடன் பிரச்சார கூட்டம் நடந்த பகுதியான காந்தி சிலை பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.