குற்றாலம் அருகே முன்னாள் அமைச்சரின் அறையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
1 min readThe Income Tax department raided the former minister’s room near Courtalam
16.4.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றாலம் அருகே முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன் தங்கியிருந்த அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் இவர் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருவதால் அருகே உள்ள குற்றாலம் – பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையினர் அவர் தங்கி இருந்த பழைய குற்றாலம் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர். அவர் தங்கி இருந்த அறை பூட்டப்பட்டிருந்த நிலையில் உடனடியாக வருமான வரித்துறையினர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.அதன்படி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உடனடியாக தான் தங்கி உள்ள அறைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த வருமான வரி துறையினர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தங்கி இருந்த அறையில் அதிரடியாக சோதனைகள் நடத்தினார்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8:மணி வரை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது.மேலும் அமைச்சர் சுரேஷ் ராஜனின் அறையில் பல லட்ச ரூபாய் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டுள்ளதாவும் வதந்தி பரவியது. இதனால் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விடுதியில் முன்பு குவிந்தனர்.
அப்போது அந்த தனியார் விடுதிக்குள் யாரும் அனுமதிக்கப் படவில்லை.
இந்நிலையில் இரவு 8 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு அந்தத் தனியார் விடுதியை விட்டு வெளியேறிய வருமான வரி துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.