5 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்
1 min read5 Days of Heat Wave: Yellow Alert for Tamil Nadu
23.4.2024
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலை வீசும் ்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் 28.04.2024 வரை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
26.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழ்நாட்டுக்கு இன்னும் 5 நாட்கள் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது . 106 டிகிரி வரை வெயில் அடிக்க வாய்ப்புள்ளது. மேற்கு வங்காளத்துக்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பகல் நேரத்தில் மக்கள் தேவையின்று வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டு இரு்ககிறது.
நாட்டிலேயே, இந்த கோடைக்காலத்தில் அதிகம் வெப்பம் பதிவான நகரங்களில் புவனேஸ்வரமும், கடப்பாவும் ஒன்றாக உள்ளன. இவ்விரண்டு நகரங்களிலும் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.3-வது இடத்தை ஈரோடு பெறுகிறது. அங்கு 109 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது.
இங்கெல்லாம் காலையிலேயே வெப்பம் கொளுத்தத் தொடங்கிவிடுகிறது. காலை 8.30 மணிக்கு இங்கு கிட்டத்தட்ட 94 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டிவிடுகிறது. 11.30 மணிக்கெல்லாம் 100 டிகிரியை நெருங்கிவிடும். கோடை வெப்பம் உச்சம் தொடும்போது 110 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டுகிறதாம். இந்த நேரத்தில், பயங்கர அனல் பறக்குமாம். இதனால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்கிறார்கள்.
ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலையில் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டிவிடுகிறது. இங்கு இந்த மாதத்தில் மட்டும் 10 நாள்கள் வெப்ப அலை வீசியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே ஏப்ரலில் 5 நாள்கள் தான் வெப்பஅலை வீசியது.
ஒடிசாவில் திங்களன்று 89 பேர் வெப்பம் அதிகரித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலூர், கரூர், திருச்சி, திருத்தணி, சேலம், தருமபுரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்ப அளவானது 105 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டிவிட்டது. இன்னமும் சென்னையில் 100 – 102 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவிலேயே வெப்பம் நிலவுகிறது. இது இயல்பு அளவைக் காட்டிலும் 2-2.7 டிகிரி வெப்பம் அதிகமாகும்.
நாளை மறுநாள் வியாழனன்று ஒடிசாவின் சில பகுதிகளில் கடும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சில இடங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.