எஸ்.ஐ மனைவியின் பொய் புகாரில் 2 பேரை கைது செய்ததாக தென்காசி கலெக்டரிடம் பெண் புகார்
1 min readIn the false complaint of S.I.’s wife Woman complains to Tenkasi Collector that 2 people were arrested
23.4.2024
தென்காசி அருகே தனியார் பேருந்தில் உதவி ஆய்வாளரின் மனைவி அருகே இருக்கையில் அமர்ந்த பழங்குடியின பெண் மீது பொய்யாக திருட்டு பட்டம் சுமத்தி பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக நேற்று பழங்குடி பெண் ஒருவர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியை சேர்ந்த சிம்மி என்பவர் கை குழந்தையுடன் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், கடந்த 12-ஆம் தேதியன்று சுரண்டையிலிருந்து கடையம் பகுதிக்கு பழைய துணிகளை வாங்குவதற்காக சிம்மியாகிய நானும், எனது அக்காவான பவானி மற்றும் உறவினர் பெண்ணான அஞ்சலி ஆகிய மூன்று பேரும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம்.
அப்பொழுது, பேருந்து இருக்கையில் ஒரு பெண் அமர்ந்த நிலையில் அந்த பெண்ணின் அருகில் எனது உறவினர் பெண்ணான அஞ்சலி அதே இருக்கையில் அமர்ந்தார்.
அப்பொழுது அந்த இருக்கையில் இருந்த சேர்ந்தமரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் என்பவரின் மனைவியான பால்தாய் என்பவர் தங்களை வேறு இருக்கையில் அமருமாறு கூறிய நிலையில், அதற்கு நாங்களும் மனுதர்கள் தான், நாங்களும் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணம் செய்கிறோம் எனக் கூறிய நிலையில், கோபம் அடைந்த பால்தாய் அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கி சென்றார்.
இந்த நிலையில், சில கிலோமீட்டர் தூரம் சென்ற பேருந்தை திடீரென இரண்டு போலீசாருடன் வந்து மறித்து தன்னுடைய பர்சை காணவில்லை என பால்தாய் கூறினார்.
உடனே பேருந்து நடத்துனர் கீழே கிடந்த பர்ஸை எடுத்து பால்தாயிடம் கொடுத்த நிலையில் அந்த பர்சில் சில நூறு ரூபாய் வைத்து பால்தாய் நடத்துனரிடம் கொடுத்தார்.
தொடர்ந்து, அஞ்சலி மற்றும் எனது அக்கா பவானி உட்பட எங்கள் மூவரையும் போலீசார் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், நீண்ட நேரம் காக்க வைத்து எனது அக்கா பவானி மற்றும் அஞ்சலி மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நாங்கள் எந்த விதமான தவறும் செய்யாமலேயே எங்கள்மீது பொய் வழக்குப்பதிவு செய்த கடையம் காவல்துறையினர் மீதும் எங்கள் மீது பொய் வழக்கு கொடுத்த உதவி ஆய்வாளரான ஜெயராஜின் மனைவி பால்தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எந்தவிதமான தவறும் செய்யாத எனது அக்கா மற்றும் உறவினர் பெண் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.