தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை விதிக்க கோரி வழக்கு-விசாரணை ஒத்திவைப்பு
1 min readThe case seeking to ban Modi from contesting the elections.. The trial has been postponed
26.4.2024
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், அதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறி, ஆனந்த் எஸ் ஜோந்தலே என்ற வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 9-ம் தேதி உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் பிரதமர் மோடி பேசியபோது, அங்கு இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் வாக்கு கேட்டார். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும் விமர்சனம் செய்தார். பிரதமரின் இந்த பேச்சு வெறுப்பு மற்றும் ஒற்றுமையின்மையை உருவாக்குகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்வதுடன், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக அறிவிக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினோம். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாதி அல்லது சமூகத்தின் உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்கக்கூடாது. கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் நடத்தை விதியில் உள்ளது.
இவ்வாறு மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்றும், நீதிபதி சச்சின் தத்தா விசாரணை நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி சச்சின் தத்தா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (உபா) தீர்ப்பாயத்திற்கு இன்று தலைமை தாங்கியதால், பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை ஒத்திவைத்தார்.
நீதிபதி தத்தா இன்று வழக்கமான நீதிமன்ற வழக்குகளை விசாரிக்க மாட்டார் என்றும், மோடிக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 29-ம் தேதி (திங்கட்கிழமை) விசாரிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.