தென்காசியில் ஆதிதிராவிடர் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
1 min readAdi Dravidian Higher Education Mentoring Program in Tenkasi
28.4.2024
தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவ மாணவியர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் சென்னை அவர்களின் உத்தரவுக்கிணங்க மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி எம்.எம்.டி. என்ற தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நல அலுவலர் முருகானந்தம் வரவேற்புரை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் முத்தையா வாழ்த்துரையும், தேசிய திறன் மேம்பாட்டு கழக பயிற்சியாளர் சனில்குமார் மற்றும் மாவட்ட கருத்தாளர். பள்ளிக்கல்வித்துறை மாற்று ஊடக மையம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகிய இருவரும் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் 510 ஆதிதிராவிட இன மாணவ, மாணவிகள், மற்றும் அவர்களது பெற்றோர்கள். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு முடித்த பின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தனி வட்டாட்சியர் (ஆதிந) கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.