பாவூர்சத்திரம் போலீஸ் விசாரணைக்கு சென்ற அதிமுக நிர்வாகி உயிரிழப்பு- முற்றுகை
1 min readAIADMK official who went to Pavoorchatram police for investigation lost his life – blockade
28/4/2024
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற அதிமுக நிர்வாகி வீட்டுக்கு திரும்பிய நிலையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குறும்பலாப்பேரி ஊராட்சி ஆவுடைக்கண் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 70) இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் குறும்பலாப்பேரி அதிமுக கிளைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சார்ந்த ஆண்ட்ரூஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக இடப்பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஆண்ட்ரூஸ் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கத்துரை மற்றும் அவரது மகள் அன்பு ராணி ஆகியோரை பாவூர்சத்திரம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காலை 11 மணிக்கு சென்ற இரண்டு பேரையும் இரவு 9 மணிக்கு மேல் போலீசார் அனுப்பி வைத்தனர்.
அன்று முழுவதும் உணவு மற்றும் உரிய மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தங்கதுரை வீட்டுக்கு திரும்பிய நிலையில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது .இதனால் அவர் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக் கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி தங்கதுரை உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்து அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தங்கத்துரையின் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்பலன்சுடன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கத்துரையின் உயிரிழப்புக்கு காரணமான பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் அதிமுகவினர்களும் குவிந்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆலங்குளம் துணை கண்காணிப்பாளர் பால்பர்ணபாஸ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்த தங்கத்துரையின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.