May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 8 பேர் பலி

1 min read

8 killed in firecracker factory explosion near Sivakasi

9.5.2024
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு அறைகள் தரைமட்டமாகின. இதில் 8பேர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.