நாமக்கல்லில் கருணாநிதி உருவச்சிலை திறப்பு
1 min read
nauguration of Karunanidhi statue at Namakkal
22.10.2024
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரம் கொண்ட, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நண்பகல் 1.45 மணி அளவில் திறந்து வைத்தார். மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் உருவச்சிலை அருகில் அமைந்து உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அவர் வணங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையானது பீடத்துடன் சேர்த்து 12 அடி உயரம் கொண்டதாகும். சிலை திறப்பு விழாவையொட்டி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவுக்கு பின் அவர்கள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சென்றனர்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி நாமக்கல் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது காரில் நின்றப்படியே பொதுமக்களின் மனுக்களை பெற்றார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்,
எங்கும் நிறைந்து – நிலைத்து நிற்கும் தமிழினத் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை நாமக்கல் மாநகரில்! என பதிவிட்டுள்ளார்.