பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் – வழிகாட்டுதல்கள் வெளியீடு
1 min read
Festival Competitions in Schools – Publication of Guidelines
3.11.2024
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வருகிற 7-ந்தேதி நடத்த வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் வருகிற 8-ந்தேதி உள்ளீடு செய்ய வேண்டும்.
வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை கொண்டு வருகிற 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும். இதில், முதல் 3 வெற்றியாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் வருகிற 21-ந்தேதி உள்ளீடு செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறும் வெற்றியாளர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளை அரசு பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் திட்டமிட்டு நடத்திட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும்போது, ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் இருக்க வேண்டும். வட்டார அளவிலான போட்டிக்கு ஒரு வட்டத்திற்கு ரூ.25 ஆயிரமும், மாவட்ட அளவிலான போட்டிக்கு ரூ.1 லட்சமும் நிதி விடுவிக்கப்படும். உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.