கண்ணாயிரத்தை குணமாக்கிய ஆட்டோ/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
The auto accident that healed Kannayiram / Comedy story / Tapasukumar
26.11.2024
கண்ணாயிரம் பஸ் விபத்தில் பழைய நினைவுகளை மறந்துவிட்ட நிலையில் தனது தாய் மறைந்து விட்டதையும் மறந்துவிட்டார். அவர் உயிரோடு இல்லை என்பதை பாவாடை தாவணியில் வந்த பூங்கொடி சொல்லியும் கேட்கவில்லை. தாயைத் தேடி ஆட்டோவில் முருகன் கோவிலுக்கு சென்றவர் தாய் இல்லாததால் தார் ரோட்டில் திருப்பிவந்து ஆட்டோ டிரைவரிடம் பழைய நினைப்பில் நூறு ரூபாய்க்குப் பதில் பத்து ரூபாய் கொடுத்தார். இதில் ஆட்டோ டிரைவர் டென்சனாகி ஆட்டோவை மேடு பள்ளமான ரோட்டில் ஓட்ட, ஆட்டோ கவிழ கண்ணாயிரம் அதில் சிக்கிக் கொண்டார். ஆட்டோ டிரைவர் வெளியே வந்து கண்ணாயிரத்தை காப்பாற்ற சிறிய காயங்களுடன் கண்ணாயிரம் உயிர் தப்பினார்.
கை கால்களை உதறிவிட்டு..ஆட்டோ டிரைவரைப் பார்த்து.. ஏம்பா.. உள்ளே ஜெயிலிருந்து வந்தியா.. என்க ஆட்டோ டிரைவருக்கு தூக்கிவாரிப் போட்டது. என்ன நாம சொன்ன வசனத்தையே திரும்பச் சொல்கிறார் என்று அதிர்ச்சியுடன் பார்க்க, கண்ணாயிரம்.. என்னப்பா.. இவ்வளவு நாளும் உள்ளே இருந்து வந்தியான்னு கேட்டேன். பதில் சொல்லலையே..என்று கேட்க..
ஆட்டோ டிரைவர் அப்படியெல்லாம் இல்லை என்றார். உடனே கண்ணாயிரம்.. அப்படியென்றால் வெளியூரா என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார்.
பிறகு ஏன் நல்ல தார் ரோடு இருக்கும் போது இப்படி மேடும் பள்ளமுமான ரோட்டில ஆட்டோவை ஓட்டிட்டு வந்திருக்க.. ஏன்.. என்று அதட்டினார்.
ஆட்டோ டிரைவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நீங்கதான் இந்த பாதையிலே வரச்சொன்னீங்கன்னு இழுக்க.. கண்ணாயிரம்.. என்ன நான் இந்த பாதையில் வரச்சொன்னேனா.. என்னை ஏமாத்தப் பாக்கிறாயா.. ஆமா என்னை எதுக்கு இங்கே கடத்திக்கொண்டு வந்திருக்க என்று கண்ணாயிரம் கேட்க, ஆட்டோ டிரைவர் ஆடிப்போய்விட்டார்.
என்ன நான் உங்களை கடத்துனேனா..என்ன சொல்லுறீங்க.. நீங்களாத்தான் உங்க அம்மாவை தேடி கோவிலுக்கு ஆட்டோவில் வந்தீங்க என்க, கண்ணாயிரம் நம்பவில்லை.
ஏங்க.. தாயிலும் சிறந்த கோவிலும் இல்லை என்பார்கள். அதற்காக, தாயைத் தேடி கோவிலுக்கு வருவார்களா..எங்க அம்மா இறந்து மூன்று வருடம் ஆச்சு. அப்படியிருக்கும்போது அம்மாவைத் தேடி எப்படி வருவேன்.. என்ன கதைவிடுறீங்களா என்றார்.
அதற்கு ஆட்டோ டிரைவர்..அப்படியில்லை..நீங்கதான் அம்மாவைத் தேடி கோவிலுக்குப் போகிறேன் என்று சொன்னீங்க.. என்க கண்ணாயிரம் கோபமாக.. என்ன உனக்கு புத்தி கித்தி மாறிப் போச்சா என்று கேட்டார்.
ஆட்டோடிரைவர் தலை முடியைப் பிய்த்துக்கொண்டு.. ஆ.. தலை காயுது.. உங்களுக்கு இப்போது எங்கே போகணும் என்று கேட்க, கண்ணாயிரம்.. கடை வீதியில் உள்ள என் வீட்டுக்குப் போகணும் என்றார்.
சரி..ஆட்டோவை தூக்குங்க.. இருவரும் சேர்ந்து ஆட்டோவை தூக்கினார்கள். கண்ணாயிரம் ஏறி ஆட்டோவில் அமர்ந்தார்.
ஏம்பா..மறுபடியும் கரடுமுரடான ரோட்டில் போயிடாத.. நல்ல தார் ரோடு போட்டுவச்சிருக்காங்க..அது தெரியாதா உனக்கு..தார் ரோடு வழியாகப் போ என்று கண்ணாயிரம் சொல்ல, ஆட்டோ டிரைவர் சரி..சரி..என்றபடி வேறு பாதையில் ஆட்டோவை இயக்கினார். அழகான தார் ரோடு வழியாக ஆட்டோ விரைந்தது. என்ன மெதுவா போப்பா.. ஏன் அவசரம் என்று கண்ணாயிரம் சொல்ல, அவர் சரி..சரி.. என்றபடி ஆட்டோவை ஓட்டினார்.
கண்ணாயிரம் வீட்டின் அருகே சென்றதும் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்த முயல, ஏம்பா வீட்டு முன்னால ஆட்டோவை நிறுத்து என்று கண்ணாயிரம் கத்த, அவர் சரி..சரி.. என்றவாறு ஆட்டோவை விரைவுபடுத்தினார். ஆட்டோ கண்ணாயிரம் வீட்டு முன் நின்றது.
கண்ணாயிரம் ஆட்டோவைவிட்டு இறங்கியதும் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை எடுத்துக்கொண்டு ஓட முயல.. ஏம்பா காசு வாங்கிட்டுப்போ.. என்று கண்ணாயிரம் சொல்ல, என்ன காசா என்று அவர் சொல்ல, ஆமாப்பா.. கட்டணம் நூறு வேண்டாமா என்று கண்ணாயிரம் கேட்க, அவர்..ம்..ம்..ம் என்றார்.
இந்தா பிடி நூறு ரூபா என்று கண்ணாயிரம் கொடுக்க ஆட்டோ டிரைவருக்கு அதிர்ச்சி.. பத்து ரூபா தந்தவர் இப்போது நூறு ரூபா தருகிறார்.. நம்பமுடியவில்லை. வந்தவரை லாபம் என்றவாறு ரூபாயை வாங்கி பையில் வைத்துக்கொண்டு ஆட்டோவில் பறந்தார்.
பழைய நினைவுகளை மறந்திருந்த கண்ணாயிரம் ஆட்டோ கவிழ்ந்ததில் மீண்டும் பழைய நினைவுகள் அவருக்கு வந்துவிடடது ஆட்டோ டிரைவருக்குத் தெரியவில்லை.
ஆட்டோவிலிருந்து இறங்கிய கண்ணாயிரம்..என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று பாடியவாறு வீட்டுக்குள் நுழைந்தார்.
பாவாடை தாவணியில் மெலிந்திருந்த பூங்கொடியைப் பார்த்து.. யாரது என்று கேட்க பூங்கொடி மெல்லத் திரும்பினாள். நான்தான் பூங்கொடி என்க, கண்ணாயிரம்.. என்னது பூங்கொடியா.. பூங்கொடி பூசனிக்காய் மாதிரி இருப்பா.. நீ புடலங்காய் மாதிரியல்லா இருக்க.. நீ பூங்கொடியின் தங்கச்சியா..ம்.. பூங்கொடிக்கு தங்கச்சியே கிடையாதே.. யார் நீ என்க.. பூங்கொடி ஆத்திரம் அடைந்தாள்.
யோவ், அப்போ நான் இரட்டை ஜடை போடைலன்னு குறை சொன்னீங்க.. இப்போ இரட்டை ஜடை போட்டுவந்திருக்கேன்.. இப்பவும் நான் பூங்கொடி இல்லன்னா என்ன அர்த்தம். நான் பூசனிக்காய் மாதிரி இருக்கேன்னு என்னை பூங்கொடி இல்லைன்னு சொன்னதால நான் கால்வயிறு அரைவயிறு சாப்பிட்டு உடம்பு இளைச்சி வந்திருக்கேன்.. இப்பவும் என்னை ஏத்துக்கல்லன்னா என்ன அர்த்தம். எங்க அப்பா அருவா அமாவாசையை அருவாவோட வரச்சொல்லப் போகிறேன் என்று கத்த கண்ணாயிரம்.. அ ஆ.. அவரை வரச்சொல்லவேண்டாம்.. நீ.. பூங்கொடிதான்.. நீ பூங்கொடிதான்..என்றார்.
அதைக் கேட்ட பூங்கொடி ஆனந்த கண்ணீர் சிந்த..கண்ணாயிரம்..விழியே கதை எழுது..
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள்வானம் தென்றல் காற்று..
உனக்காகவே நான் வாழ்கிறேன் என்று பாடினார்..
அப்போது வாசலில் ஒரு ஆட்டோவந்து நின்றது. அதிலிருந்து ஜவுளிக்கடைக்காரர் இறங்கினார். என்ன கண்ணாயிரத்துக்கு பழைய நினைவு வந்திட்டாமே..என் ஐம்பதினாயிரம்..என் ஐம்பதினாயிரம்..என்ற கேட்டபடிவர.. கண்ணாயிரம் விழிக்க.. வெளியே நின்ற ஆட்டோக்காரர் கைக்கொட்டி சிரிக்க.. பூங்கொடி ம்.. ஆ.. அப்படியா என்று புன்னகைத்தாள்.
கண்ணாயிரம் மட்டும்..ஆ. என்று வாயைப் பிளந்தபடி.. நின்றார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.