அம்பேத்கர் காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min read
Dravidian model government is walking on the path shown by Ambedkar: M.K. Stalin is proud
6.12.2024
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்்ற அரசு விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் அவர் வழங்கினார். பின்னர் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
அம்பேத்கர் காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது. அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இல்லை என தந்தை பெரியார் கூறினார். அதிகாரிகள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதால் அரசுக்கு நற்பெயர் கிடைத்துள்ளது. தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்பதே சரி.
நமது லட்சிய வழியில் ஒரு சில இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஏதோ ஒரு சம்பவம் நடந்தால் இதுதான் பெரியார் மன்னா என கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் மதவெறி, சாதி வெறி தமிழ்நாட்டு மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது. மதவெறி சாதிவெறி சக்திகளின் எண்ணம் இந்த மண்ணில் நான் இருக்கும் வரை நிறைவேறாது. சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.