June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம்: மு.க.ஸ்டாலின் திறந்தார்

1 min read

Renovated Periyar memorial in Vaikom: MK Stalin inaugurated it

12.12.2024
கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் உள்ளது. அந்த கோவில் இருக்கும் தெருவில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து சென்றால் அது தீட்டு என்றும், எனவே அவர்கள் அங்கு செல்லவே கூடாது என்றும் தடை இருந்தது.
அந்த தடையை உடைப்பதற்காக 1924-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம்தான் வைக்கம் போராட்டம். பெரியார் அங்கு சென்று நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை நினைவுகூறும் வகையில் பெரியாருக்கு வைக்கத்தில் நினைவகம் அமைக்கப்பட்டது. கேரள அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த நினைவகம் கட்டப்பட்டு 1994-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
அந்த நினைவகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை புனரமைக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதற்காக ரூ.8 கோடியே 14 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, புனரமைப்பு பணிகளும், நூலகத்தை விரிவுபடுத்தும் பணிகளும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டன.

அதில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அரிய புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை சிறப்பான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலையும் இருக்கிறது.
இதையடுத்து பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை கேரள மாநிலம் கொச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். கொச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின்போது, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக தந்தை பெரியார் நினைவகத்தில் உள்ள பெரியாரின் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து தி.க. தலைவர் கி.வீரமணி, திருமாவளவன், தமிழக அமைச்சர்கள், கேரள மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய ஊரில் அவருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டுள்ளது. பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை காண கருணாநிதி இல்லையே என்ற வருத்தம் உள்ளது. எதற்கு அஞ்சாமல் பணியாற்றி சமூகத்தை விழுப்புடன் வெற்றி பெற வைத்தவர் பெரியார் என்று அண்னா கூறினார்.
சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக வைக்கத்தில் பெரியார் நினைவகம் உள்ளது. வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைபோல பெரியார் நினைவகமும் கம்பீரமானது. வைக்கத்தில் பெரியார் நினைவகம், நூலகம் திறந்து வைக்கப்பட்ட இந்நாள் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்தளால் பொறிக்கப்பட வேண்டும். சமூக அரசியல் போராட்டத்தின் வெற்றியின் சின்னமாக வைக்கம் நினைவகம் அமைந்துள்ளது.
வைக்கம் ஒடுக்க முறையை எதிர்த்த கேரள காங்கிரஸ் தலைவர்கள் கைதாகினர்; வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரு முறை கைதானார். வைக்கம் போராட்ட நினைவு அஞ்சல் தலையை விரைவில் வெளியிட உள்ளோம். இனி நாம் அடையவிருக்கு வெற்றிகளுக்கு அடையாளமாக வைக்கம் நினைவகம் இருக்கும். பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த வரலாற்று பெருமை.
பெரியார் நூலகம் கட்டிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திகழ்கிறார். கேரளாவிற்கு வரும் அனைவரும் வைக்கம் நினைவகத்திற்கு வர வேண்டும்.
நாட்டில் சமூக நீதிக்கான தொடக்கப் புள்ளி வைக்கம் போராட்டமாக இருந்தது. வைக்கம் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது. வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்ற பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என திரு.வி.க. போற்றினார். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர வேண்டும்.

100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளோம். ஆனால் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் மக்கள் மனதில் மாற்றம் வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிடல் மாடல் அரசின் கொள்கையாகவே உள்ளது. தமிழ்நாட்டை போல கேரளாவிலும் முற்போக்குத் திட்டங்கள் நிறைவேற்றம்.

எல்லாவற்றையும் சட்டம் போட்டு மாற்றிவிட முடியாது. சட்டம் தேவைதான்; அதைவிட மக்கள் மனமாற்றம் மிகவும் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். முன்பு இருந்ததைவிட வேகமாக செயல்பட வேண்டும்; நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க வேண்டும். சமநிலை சமூகத்தை அடைய நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *