கருத்து வேறுபாடு காரணமாக கனடா துணை பிரதமர் ராஜினாமா
1 min read
Canada’s deputy prime minister resigns over disagreements
17.12.2024
கனடா நாட்டின் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கிறிஸ்டியா அறிவித்துள்ளார்.
துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என இரு பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு எதிரான கருத்து வேறுபாட்டை முதல் முறையாக பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் கனடாவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 250 கனடா டாலர்களை காசோலையாக வழங்குவதற்கான கொள்கை தொடர்பாக பிரதமர் ட்ரூடோ மற்றும் துணை பிரதமராக இருந்த கிறிஸ்டியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் நீண்ட காலமாக ட்ரூடோவின் லிபரல் கட்சியில் மிக முக்கிய தலைவராக இருந்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் நிதியமைச்சராகவும் கிறிஸ்டியா பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில், துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா கனடாவின் நிதி வருவாயை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தி இருக்கிறார்.
தனது ராஜினாமா கடிதத்தில் டிரம்ப்-இன் அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கிறிஸ்டியா குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்டியா தொடர்ந்து லிபரல் உறுப்பினராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இருக்க வரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், வரவருக்கும் கனடா தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இறக்குமதி செய்யப்படும் கனடா நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இது கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.