தாய்ப்பால் விருந்து கொடுத்த பெண்
1 min read
The woman who gave a breastfeeding party
19.12.2024
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக இளம்பெண்கள் பலரும் தாய்ப்பால் தானம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் படகில் தனது குழுவினருக்கு விருந்து வைத்த போது தாய்ப்பாலை பரிமாறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் சாராஸ் டே என்ற பெயரில் பிரபலமானவராக திகழும் சாரா ஸ்டீவன்சன் என்பவர் தனது குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு விருந்து வைத்துள்ளார். படகில் நடந்த இந்த விருந்தின் போது சாரா தனது குழுவினருக்கு தனது தாய்ப்பாலையே விருந்து பரிமாறிய காட்சிகள் அதில் உள்ளது.
சாரா தனது தாய்ப்பாலை பம்ப் செய்து ஒரு கிளாசில் எடுத்து குழுவில் ஒருவருக்கு வழங்குகிறார். அதனை குடிக்கும் பெண், கடவுளே என கூறிவிட்டு சிரிக்கிறார். தொடர்ந்து மற்றவர்களுக்கும் சாரா தாய்ப்பால் பரிமாறிய காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டனர். சில பயனர்கள் தாங்களும் இது போன்று முயற்சித்ததாக பதிவிட்டிருந்தனர். ஒரு பயனர், நான் 3 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் என் தாய்ப்பாலை குடிக்க முயற்சித்ததில்லை என பதிவிட்டுள்ளார்.