அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: அமைச்சர் பதிவு
1 min read
Student sexually assaulted on Anna University campus:Minister takes action
25.12.2024
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
2ம் ஆண்டு பயிலும் என்ஜினீயரிங் மாணவி 21ம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் 3ம் ஆண்டு பயிலும் தனது காதலனான என்ஜினீயரிங் மாணவனுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 பேர், மாணவனை சரமாரியாக தாக்கினர். பின்னர், 2 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள். கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .
திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.