சென்னை கல்லூரி மாணவியை கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை
1 min read
Death sentence for youth who killed Chennai college student
30.12.2024
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற மாணவியை ரெயில் முன்பு தள்ளி சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்தார். மகள் இறந்த துக்கத்தில் சத்யபிரியாவின் தந்தையும் மரணம் அடைந்தார். ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக தகவல் வெளியானது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த 27-ந்தேதி சதீஷை குற்றவாளி என நீதிமன்றம் கூறியது. தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 30-ந்தேதி(இன்று) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளி கொலை செய்த சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மாணவியை பின் தொடர்ந்து தொல்லை அளித்த பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.