அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை; சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., கேவியட் மனு
1 min read
Anna University student sexually harassed; AIADMK files caveat in Supreme Court
1.1.2025
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட், மூன்று அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அக்கட்சியின் சார்பில் வக்கீல் வரலட்சுமி என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், சிறப்பு விசாரணைக்குழு அமைத்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் போது தங்களின் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, சிறப்பு விசாரணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தங்களது தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் அ.தி.மு.க., கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
அண்மையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் போன போது, கேவியட் மனு அ.தி.மு.க., தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.