தென்காசியில் சாலை விபத்தில் உயிரை காப்பாற்றினால் பரிசு-கலெக்டர் அறிவிப்பு
1 min read
Collector announces reward for saving a life in a road accident in Tenkasi
9.1.2025
தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நிலையில் உள்ள நபரை உயிரை காப்பாற்றும் நபர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய அளவில் நல்ல குடிமகன் திட்டத்தின் கீழ் சன்மானமும் சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நிலையில் உள்ள நபரை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது விபத்து சிகிச்சை மையங்களுக்கோ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொண்டு சென்று உயிரை காப்பாற்றும் நபர்களை கௌரவிக்கும் வகையில், நல்ல குடிமகன் திட்டத்தின் கீழ் பாராட்டு சான்றிதழுடன் ரூ. 5000 /- ரொக்கப் பரிசும் வழங்கிட பரிந்துரை செய்யப்படும். தேசிய அளவில் நல்ல குடிமகன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். சன்மானம் பெறவும் பரிந்துரை செய்யப்படும். மேலும் சாலைபாதுகாப்பு தொடர்பான பணிகளை சிறப்பாக மேற்கோள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கும் தேசிய அளவில் சான்றுகளும், பரிசுகளும் வழங்கிட பரிந்துரை செய்யப்படும்.
மேற்படி விபத்துகளில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது விபத்து சிகிச்சை மையங்களுக்கோ கொண்டு செல்லும் நபருக்கு தகுந்த சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.