கண்ணாயிரத்தைக் குழப்பிய ரெயில்டிக்கெட் /நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
The train ticket that confused Kannayiram/ Humorous story / Tapasukumar
17.1.2025
கண்ணாயிரம் புதுவையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிச் சென்றார். விழுப்புரம் வந்து ரெயில் நின்றதும் அன்ரிசர்வ் கோச்சில் ஏறினார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பாத்ரூம் பக்கம் நிற்க இடம் கிடைக்க அங்கே நின்றபோது நாற்றம் தாங்காமல் வாந்தி எடுத்தார்.
கூட்டத்தில் நின்றவர்கள் சிதறி ஓடி வாசல் பக்கம் நிற்க.. ரெயில் புறப்பட்டது. டி.டி.ஆர் அந்த கோச்சில் ஏற.. அங்கே நின்றவர்கள் விழிக்க, டி.டி.ஆர். என்ன விழிக்கிறீங்க.. டிக்கெட்டை எடுங்க என்க.. ஒருவர்.. சார்.. வாந்தி எடுத்திட்டார் சார் என்று முகத்தை சுழிக்க.. டி.டி.ஆர் முகத்தைப் பொத்திக்கொண்டு.. யாரய்யா அப்படிப் பண்ணுனது என்று கேட்டபோது வேகமாக சென்ற ரெயில் திடீரென்று நின்றது.
யாரய்யா அபாயச் சங்கிலியை இழுத்தது என்று கத்தியவாறு டி.டி.ஆர். அந்தப் பெட்டியிலிருந்து இறங்கி ரிசர்வேஷன் பெட்டியில் போயி ஏறினார்.
யார் அபாயச் சங்கிலியை இழுத்தது என்று கேட்க, ஒரு இளம்பெண் ..நான் தான் அபாயச் சங்கிலியை இழுத்தேன் என்க, எதற்காக இழுத்தீர்கள் என்று கேட்க, என் கணவருக்காகத்தான் அபாயச் சங்கிலியை இழுத்தேன் என்றார்.
அடடா கணவன் மேல் எவ்வளவு அக்கறை பாருங்க.. அவர் மேல் அவ்வளவு பாசமா என்று ஒருவர் கேட்க, அந்தப் பெண்ணோ..அதெல்லாம் ஒண்ணும் இல்லை. டிக்கெட் அவருக்கிட்ட இருக்கு.. அவர் தராம மறந்து கீழே நின்னுட்டாரு.. அதான் என்றார். அதைக்கேட்டவர் அதிர்ச்சி அடைய அப்படியா என்றார். அந்தப் பெண் செல்போனில் கணவரை அழைக்க, டிக்கெட் எங்கே..கொடுக்காமப் போயிட்டீங்க என்று கத்த, அவர்.. ஓ..அப்படியா.. ரெயில் அதான் நிக்குதா..இதோ வர்ரேன் என்றபடி ஓடி வந்தார்.
ரிசர்வேஷன் பெட்டியிலே ஏறி மனைவியிடம் டிக்கெட்டை கொடுத்துவிட்டு.. பத்திரமா போ என்றபடி கீழே இறங்கினார்.
என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா.. என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்று மனதுக்குள் கத்த.. ரெயில் புறப்படவில்லை. கண்ணாயிரம் வாந்தி எடுத்ததால் ரெயில்வே துப்புரவு பணியாளர் அன்ரிசர்வ் பெட்டியிலே ஏறி பைப் தண்ணீரை அடித்து கிளீன் பண்ண.. கண்ணாயிரம் விழித்துக்கொண்டே நின்றார்.
அந்தப் பெட்டியில் ஈரமாக இருக்க..ஒருவர் தன் சட்டைப்பையில் வைத்திருந்த சின்னசெண்டு பாட்டிலை எடுத்து அந்த பெட்டியில் லேசாகத் தெளித்தார்.
கண்ணாயிரம் மேலேயும் கொஞ்சம் சென்ட் அடிக்க..அவர் வெட்கத்துடன் சிரித்தார். அப்போது சென்ட் அடித்தவர்.. ஏங்க பஸ்சில போனாத்தான் வாந்தி எடுப்பாங்க.. நீங்க ரெயிலில் போனாலும் வாந்தி எடுக்கிறீங்க.. ரெயில் பிடிக்காதா என்று கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம், ரெயிலு பிடிக்கும்.. இந்த பாத்ரூம் வாடை பிடிக்கல என்றார்.
ஓ..அப்படியா என்று சொன்னவர் சற்று ஒதுங்கி நின்றார். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டது. ரெயிலைவிட்டு இறங்கி நின்றவர்கள் பாய்ந்து ஏறினார்கள். கண்ணாயிரம்..அப்பாட ரெயிலு புறப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சி அடைந்தார்.
அருகில் நின்ற ஒருவர் கண்ணாயிரம் பெரிய பை வைத்திருப்பதைப் பார்த்து. எங்கே எங்கிருந்து வர்ரீங்க என்று கேட்க ,கண்ணாயிரம்,நானா பாண்டிச்சேரியில் இருந்து வர்ரேன் என்றார்.
அதைக் கேட்டவர், ஓ..அங்கிருந்து வர்ரீங்களா.. பையிலே என்ன சரக்கா என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்க, கண்ணாயிரம் புரியாமல், என்ன கேட்கிறீய என்று கேட்டார்.
அதற்கு அவர்,என்ன புரியலையா.. பையிலே என்ன மதுப்பாட்டில் வச்சிருக்கீயளா என்று கேட்க, கண்ணாயிரம் ச்சே அதெல்லாம் இல்லை.. தண்ணிதான் இருக்கு என்றார்.
அதைக்கேட்டவர் ஓ..மதுப்பாட்டில் என்பதை மறைத்து தண்ணி என்கிறீயளா.. என்று சொல்லி சிரித்தார்.
கண்ணாயிரம் அதெல்லாம் இல்லை..தண்ணிதான் என்றார்.சரி ..சரி என்று அவர் புன்னகையுடன் திரும்பிக்கொண்டார்.
அப்போது வேகமாக ஒரு ரெயில் கிராஸ் பண்ணிச் சென்றது. கண்ணாயிரம் அது என்ன ரெயில் என்று கேட்க, அருகில் நின்றவர்..அதுவா சரக்கு ரெயில் என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் திடுக்கிட்டார். என்னது சரக்கு ரெயிலா..சரக்குன்னா மதுப்பாட்டில் என்றல்லவா சொன்னாங்க.. அப்போ அந்த ரெயில் பெட்டியிலே எல்லாம் மதுப்பாட்டில் ஏற்றிட்டுப் போறாங்களா.. போலீஸ் பிடிக்கமாட்டாங்களா.. என்று அப்பாவியாக கேட்டார்.
அதற்கு அவர், ஏங்க..அதில் மதுப்பாட்டில் இல்லை. உரமூட்டை ஏற்றிக்கொண்டு போறாங்க..புரியுதா என்றார்.
உடனே கண்ணாயிரம்,ஏங்க..நான் தண்ணிவச்சிருந்தா சரக்கு வச்சிருக்கியளான்னு கேட்கிறீங்க..அப்போ உரம் ஏற்றிட்டுப் போகிற ரெயிலை உர ரெயிலுன்னுதான சொல்லணும்.. ஏன் சரக்கு ரெயிலுன்னு ஏன் சொல்லுறீங்க.. அது தப்புல்லா என்றார்.
அவர்..ஏப்பா..ரெயில் எதை ஏத்திட்டுப் போனாலும் சரக்கு ரெயில் என்றுதான் சொல்வாங்க ..நீ என்ன சரக்கு அடிச்சிருக்கியா என்று கேட்க, கண்ணாயிரம் கோபமானார். எனக்கு அடிக்கிற பழக்கம் இல்லை என்றார்.
அதற்கு அவர் ..அப்போ ஏன் வாந்தி எடுத்த என்று கேட்க ,கண்ணாயிரம்..அதுவா..பாத்ரூம் நாத்தம் தாங்காம வாந்தி எடுத்திட்டேன் என்றார்.
சரி..மீண்டும் வாந்தி எடுத்திடாத..திரும்பி நில்லு என்று அருகில் உள்ளவர் சொல்ல,கண்ணாயிரம் முறைத்தபடி திரும்பி நின்றார்.
மற்றொருவர் கண்ணாயிரத்திடம் டிக்கெட் எடுத்திங்களா என்று கேட்க, கண்ணாயிரம் பையைக் கீழே வைத்துவிட்டு..கால்சட்டைப் பைக்குள்ளிருந்து டிக்கெட்டை எடுத்தூக் காட்டினார்.
அருகில் நின்றவர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்துவிட்டு ,யோவ்..பேசஞ்சர் ரெயிலுக்கு டிக்கெட் எடுத்திட்டு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியிருக்க என்று அதட்டினார்.
கண்ணாயிரத்தூக்கு கோபம் வந்தது.நீங்க யாரு என்று கேட்க, அதற்கு அவர் நானா பேசஞ்சர் என்றார். உடனே கண்ணாயிரம், ஓ..நீங்க பேசஞ்சர் அப்படின்னு சொல்லுறுங்க..அப்படின்னா நீங்க பேசஞ்சர் ரெயிலில்தானே ஏறணும்.. ஏன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினீங்க என்று மடக்கினார்.
அதற்கு அவர்,நான் பேசஞ்சர் தான். ஆனா நான் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்குரிய டிக்கெட் எடுத்திருக்கேன்.. அதனால எக்ஸ்பிரஸ் ரெயிலில் வர்ரேன் என்றார்.
கண்ணாயிரம் உடனே..நீங்களூம் டிக்கெட் வச்சிரூக்கிய..நானும் டிட்கெட் வச்சிருக்கேன்..அவ்வளவுதான்.டிக்கெட் எடுக்காம இருந்தால்தான் தப்பு என்றார்.
அதைக் கேட்டவர்..யோவ்,இரண்டு டிக்கெட்டும் எப்படி ஒண்ணாகும்.நான் அதிக பணம் கொடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் எடுத்திருக்கேன்..நீ பணம் குறைவாக செலுத்தி பாசஞ்சர் ரெயிலுக்கு டிக்கெட் எடுத்திருக்க என்க கண்ணாயிரமோ..என்னங்க..எல்லா ரெயிலும் ஓண்ணுதாங்க..எல்லா ரெயிலும் தண்டவாளத்திலேத் தான ஓடுது என்றார்.
அதற்கு அவர்,ஏங்க..இரண்டு ரெயிலும் எப்படி ஒண்ணாகும். எக்ஸ் பிரஸ் ரெயிலுக்கு அதிக கட்டணம் செலுத்தணும். இந்த ரெயில் சீக்கிரமா வேகமாப் போயிடும். பேசஞ்சர் ரெயிலில் குறைவான கட்டணம். அது..ஊரெல்லாம் சுத்தி மெதுவா இரண்டுநாள் கழிச்சித்தான் ஊர் போய் சேரும்..என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..என்னங்க அநியாயம்..அதிக கட்டணம் வாங்கிட்டு எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறைஞ்ச ஊரைத்தான் சுத்திக்காட்டுவாங்களா.. பேசஞ்சர் ரெயிலில் குறைஞ்ச கட்டணத்தில் அதிக ஊர்களை இரண்டு நாள் சுத்திக்காட்டுறாங்களா. .நான் பேசஞ்சர் ரெயிலில் போயிருந்தா நிறைய ஊரை சுத்திப் பாத்திருப்பேனே.. இப்படி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து மாட்டிக்கிட்டேனே.. குறைஞ்ச ஊரைத்தான் பாக்க முடியுமா..என்னை ஏமாத்திட்டாங்க என்று சிணுங்கினார்.
அருகில் நின்றவர்..யோவ்..அழாதய்யா..பேசஞ்சர் ரெயில் டிக்கெட் எடுத்திட்டு எக்ஸ் பிரஸ் ரெயிலில் நீ ஏறுனது தப்பு.. டி.டி.ஆர் உனக்கு அபராதம் போட்டுருவாரு என்க.. கண்ணாயிரம் விழிக்க, ரெயிலில் கடபுடா என்ற சத்தம் கேட்க..எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.