உ.பி. மகா கும்பமேளாவில் ரூ.2 லட்சம் கோடி வருமானம்
1 min read
UP Maha Kumbh Mela generates Rs 2 lakh crore in revenue
17.1.2025
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
4,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறும், ‘மகாகும்ப் 2025’ முன்பை விட அதிக பணம் புரளும் களமாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேச அரசு இந்த நிகழ்வுகளுக்காக சுமார் ரூ.7,500 கோடி செலவிட்டுள்ளது.
இந்நிலையில் ‘மகாகும்ப் 2025’ மூலம் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் வருவாயை ஈட்டப்படும் என்று உத்தரப்பிரதேச தொழில் மேம்பாட்டு அமைச்சர் நந்த கோபால் குப்தா நந்தி மதிப்பிட்டுள்ளார்.
இதற்கு மத்தியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்றுகூடலை தனது சந்தைக்களமாக பயன்படுத்தி வருகிறது. 40 கோடி பேரிடம் தங்களது பொருட்களையும், சேவைகளையும் விளம்பரப்படுத்தக் கோடிக்கணக்கில் இந்நிறுவனங்கள் இங்கு வாரி இறைத்து வருகின்றன.
அங்கு முன்னணி பிராண்டுகள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் முகாம் அமைத்து, தங்கள் தயாரிப்புகளை வரிசைப்படுத்தி, மாதிரிகள் மற்றும் குளிர்பானங்களை விநியோகித்து பக்தர்களை இழுக்க முயற்சித்து வருகின்றன.
இந்த வருட மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் சுமார் ரூ.3,600 கோடி செலவழிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நிகழ்ச்சிகளில் செயற்கை நுண்ணறிவு (AI)- தீம்கள், LED திரைகள், மெய்நிகர் மற்றும் மொபைல் மூலம் விளம்பர செய்வதற்கான சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 2,000 கோடி செலவு இதில் அடங்கும். பக்தர்கள் ஓய்வெடுப்பது உள்ளிட்ட வசதிகளை செய்து தருவது போன்ற உத்திகளின்மூலமும் இந்த விளம்பரப்படுத்தல் நிகழ்கிறது.