ஞானசே கரன் மீதான வழக்கு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
1 min read
Case against Gnanase Karan; Madras High Court orders Tamil Nadu government
3/4/2025
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், கடந்தாண்டு, டி., 25ல், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர். ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதியில் மட்டும், ஏழு சொகுசு பங்களாக்களில் கொள்ளை அடித்துள்ளார். இது தொடர்பாக, பள்ளிக்கரணை போலீசாரும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பின், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2013ல், மாம்பலம் காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரித்தனர். அந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதே ஞானசேகரன் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, திருட்டு வழக்கில் ஞானசேகரனின் பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று மனுதாரர் முறையிட்டார்.
இதனை விசாரித்த கோர்ட், ஞானசேகரன் மீதான வழக்குகளின் விபரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.