தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு கோர்ட்டு இடைக்கால தடை
1 min read
Court grants interim stay on Kudamuzhu at Kashi Vishwanathar Temple in Tenkasi
3.4.2025
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான யாக சாலை பூஜை இன்று தொடங்கியது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கக்கோரி தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. கோவில் பகுதியில் நூறு டிராக்டருக்கும் அதிகமாக மண் அள்ளப்பட்டது. இதனால் கோவில் கட்டிடம் உறுதியிழந்துள்ளது. இதனையடுத்து கோவில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது.
எனவே, கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதித்தும், கோவில் புனரமைப்பு பணிகளின் தற்போதுள்ள நிலை குறித்து ஆய்வு செய்ய ஆணையரை நியமித்தும், கோவில் புனரமைப்பு பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், திருப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் மனுவுக்கு அறநிலைய துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
கோவிலின் பணிகள் பற்றி ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.